Sunday, April 1, 2012

ஞானப் பேரரசு!

ஒரு பக்தி நெறி – பிறந்து, வளர்ந்த வரலாறு :-

திருமாலை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் நெறி ஸ்ரீ வைஷ்ணவம் – ஸ்ரீவைஷ்ணவத்தின் முதல் ஆச்சாரியார் ஸ்ரீநாத முனிகள். இவரது காலம் கி.பி. 824.

சிதம்பரம் வட்டத்தைச் சார்ந்த ‘காட்டுமன்னார் கோவில்’ என்ற ஊர் பழங்காலத்தில் வீரநாராயணபுரம் என்று வழங்கப்பட்டது. இதுவே ஸ்ரீநாத முனிகளின் காலத்தில் மறைந்துவிட்டது.

இந்நிலையில் ஒரு நாள் ----

ஸ்ரீநாதமுனிகள் கும்பகோணத்திற்குச் சென்றிருந்தார். அங்கு பெருமாள் கோவிலில் இறைவனை வழிபட்டுக்கொண்டிருந்த போது அற்புதமான பாடல் ஒன்று அவரது செவிகளில் புக, மெய் சிலிர்க்கத் திரும்பிப் பார்த்தார். அங்கே ---

யாத்ரிகர் சிலர் கூடி நின்று ‘ஆரா அமுதே!’ எனத் தொடங்கும் திருவாய்மொழிப் பதிகத்தை பாடிக்கொண்டிருந்தனர். இனிய பாடலில் தன்னை மறந்தார் நாதமுனிகள். பாடலின் இறுதியில் ‘குருகூர்ச் சடகோபன் குழலின் மலியச் சொன்ன ---- ‘ என்ற அடிகளைச் செவியுற்றதும் பரவசமானார்.

இவ்வருமைப் பாடலை இயற்றியவர் ‘சடகோபர்’ என்பதும் அவரது ஊர் ‘திருக்குருகூர்’ என்பதுமே அவரது ஆனந்தத்திற்குக் காரணம். ‘ஓராயிரத்துள் இப்பத்தும்’ என்பதைக் கேட்டதும் நாதமுனிகள் அவ்யாத்ரிகர்களிடம், ‘உங்களுக்கு ஆயிரமும் தெரியுமா?’ என்று ஆவலோடு கேட்டார்.

‘எங்களுக்கு இவ்வளவு தான் தெரியும்!’ என்ற அவர்களது பதிலில் பெரிதும் ஏமாற்றம் அடைந்தார். என்றாலும் ---

‘எப்படியும் அந்த ஆயிரம் பாக்களையும் கேட்டுப் பெற்றாக வேண்டும்’ – என்று உறுதி அவரது உள்ளத்தில் உருவாயிற்று.

அதன் விளைவு.

ஸ்ரீநாதமுனிகள் – உடனே – சடகோபர் என்ற நம்மாழ்வார் அவதரித்த திருத்தலமாகிய திருக்குருகூர் என்ற ஆழ்வார் திருநகரிக்குச் சென்றார். அங்கே ----

பாராங்குசதாசர் என்பவரைச் சந்தித்தார். இவர் மதுரகவி ஆழ்வாரின் சீடப் பரம்பரையில் வந்தவர். அவரிடம், ‘தாம் திருவாய்மொழி ஆயிரமும் தேடிவந்திருப்பதாகவும் அவை அவருக்குத் தெரியுமா?’ என்றும் கேட்டார். அதற்குப் பாராங்குசதாசர், ‘திருவாய்மொழி ஆயிரம் மட்டுமல்ல. இதேபோல் நான்கு ஆயிரம் பாடல் பாடப்பெற்றிருப்பதாகத் தம் குருவின் மூலம் அறிந்திருப்பதாகவும், தமக்கு கண்ணிநுண் சிறுத்தாம்பு…’ என்ற பாடல் மட்டும் நினைவில் இருப்பதாகவும் கூறி அதனைப் பாடியும் காட்டினார். அதனைப் பாடிப்பாடி உருவேற்றிக்கொண்ட நாதமுனிகளின் பணி இப்போது நான்கு மடங்காக வளர்ந்து விட்டது. ஆம்……………

தேடி வந்த்தோ ஆயிரம் பாசுரங்கள். வந்த இடத்தில் கிடைத்த செய்தியோ பாசுரங்கள் நாலாயிரம் இருப்பதாக! எனவே ‘எப்படியும்--- எப்பாடுபட்டாகிலும் நாலாயிரம் பாசுரங்களையும் தேடிப்பிடித்து விடுவது’ – என்று மனதில் உறுதி செய்து கொண்டார்.

ஊர்ஊராய் பாசுரம் பாடுவோரைத் தேடி அலைந்தார். கிடைத்த பாசுரங்களைக் கேட்டு மனப்பாடம் செய்துகொண்டார். விடாமுயற்சி --- முழுப்பயனையும் தந்தது. அன்று ஸ்ரீநாதமுனிகள் நாடெல்லாம் சுற்றி அலைந்து சேகரித்துத் தொகுத்தளித்த செல்வமே இன்று வைஷ்ணவர்கள் ---- பிறகும் கூட – பாடி மகிழும் ‘திவ்வியபிரபந்தம்’

அன்று ஸ்ரீநாத முனிகள் அரும்பாடுப்பட்டு சேகரித்து அளித்திராவிடில் இன்று நம்மிடம் ‘நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்’ இருக்குமா?



* * * * * * * * * * * * * * * *

ஸ்ரீநாதமுனிகளின் மகன் வழிப்பேரன் யமுனாச்சாரியார்.

இவர் சிறுவனாக இருந்தபோது சோழ அரசவையில் ஒரு புலவர் வந்தார். வாதப்போரில் தன்னிகரற்றவர், பலரை வென்றவர். தோல்வியே கண்டறியாதவர் ; இதனால் கர்வம் மிகக் கொண்டவர்.

அப்புலவருடன் வாதாடி வெல்லவேண்டும் என்ற எண்ணம் சிறுவனான யமுனச்சாரியாரின் உள்ளத்தில் தோன்றியது. அரசவைக்கு வந்து தன் எண்ணத்தை வெளியிட்டார். கேட்ட மன்னனோ எள்ளி நகையாடிச் சிரித்தான். பெரும் புலவனை வெல்ல இச்சிறுவனா? என்றாலும் –

உடன் இருந்த சோழமாதேவியோ சிறுவனின் முகத்தில் ஒளிரும் ஞானஒளியால் கவரப்பட்டார். ‘உருவு கண்டு எள்ளாமை வேண்டும்!’ என்று கருதினார். சிறுவன் யமுனாச்சாரிக்காகப் பரிந்து பேசினார். அரசியாரே சிபாரிசு செய்யும் போது அரசனால் மறுக்க முடியவில்லை.

குறிப்பிட்ட காலத்தில் – குறித்த நேரத்தில் – சோழ மன்னரின் கொலுமண்டபத்திலேயே சோழரின் அவைக்களப் புலவருக்கும் – அரசியாரால் சுவிகரிக்கப்பட்ட யமுனாச்சாரியாருக்கும் சொற்போர் தொடங்கியது. கடுமையான கருத்து மோதலுக்குப் பின் சிறுவன் யமுனாச்சாரியாரே வென்றார். அரசியாரின் மகிழ்ச்சிக்கோ அளவே இல்லை. யமுனாச்சாரியாரின் வெற்றியைத் தன் வெற்றியாகவே கருதிக் களிப்புற்ற சோழமாதேவி, “ஆளவந்தாரே…… ……. என்னை ஆளவந்தாரே’! – என்று பாராட்டினார்.

அன்று தொடங்கி யமுனாச்சாரியார் என்ற பெயர் மறைந்தது. ‘ஆளவந்தார்’ என்ற சிறப்புப் பெயரே நின்று நிலவிற்று.

ஸ்ரீமந்நடன கோபால நாயகி சுவாமிகளும் கூட தாம் பாடியருளிய தமிழ்க் கீர்த்தனைகளில் ஒன்றான ‘வாழி திருநாமம்’ கீர்த்தனையில்,

‘ஆளவந்தார் தாளிணைகள் அனைவர்தம் – வாழியே’ என்றருளி உள்ளார்.

இவ்வாறு இளம் வயதிலேயே புகழ் கொடி நாட்டிய ஆளவந்தார் பிற்காலத்தில் திருவரங்கத்திலிருந்து வைணவத்திற்குப் பெருந்தொண்டாற்றினார். வைணவ ஆச்சாரியாராக விளங்கி பல நூறு மாணவர்களை வைணவப் பிரச்சாரத்திற்குத் தயாராக்கினார். இவரது மாணவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பெரியநம்பி, திருக்கச்சிநம்பி, மாறனேர்நம்பி, திருக்கோஷ்டியூர்நம்பி, பெரியதிருமலைநம்பி போன்றோர்.

விஸிஷ்டாத்வைத்தத்தை பாரதம் எங்கும் பரப்பிய ஸ்ரீராமானுஜர் – ஆளவந்தார் கண்டெடுத்த மாணிக்கமே. ஆனால் இவ்விருவர்களும் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்டதில்லை, என்றாலும் மேலே குறிப்பிட்ட ஆளவந்தாரின் சீடர்கள் அனைவரிடமும் இராமானுஜர் ஞானக்கல்வி கற்று ஆளவந்தாரின் ஞானம் முழுவதையும் பெற்றார். ஆளவந்தாருக்குப்பின் திருவரங்கத்தின் ஆச்சாரியார் பீடத்தில் அமர்ந்து ஆளவந்தார் வழியில் அரும்பணிகள் பல ஆற்றினார். தீண்டத்தகாதவர் என ஜாதியால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்களுக்கு ‘திருக்குலத்தார்’ என கி.பி. 1035 ஆம் ஆண்டிலேயே சிறப்பித்து அவர்களைத் தம் சீடராகவும் ஏற்றார். மகளிருக்கும் சம உரிமை தந்து சீடராக ஏற்ற முதல் ஆச்சாரியார் ஸ்ரீராமானுஜரே கி.பி. 1040 ஆம் ஆண்டிலேயே திருக்குலத்தாரையும் (ஹரிஜனங்களையும்) அழைத்துக் கொண்டு ஆலயப்பிரவேசம் செய்த முதல் மகாத்மா – ஆச்சாரியார் – இராமானுஜாச்சாரியரே!

இதனால்தானே ஸ்ரீமந்நடனகோபாலநாயகி சுவாமிகளும் ‘ஸினன் ஹோனா……! என்று தொடங்கும் கீர்த்தனையில்,

‘ராமானுஜ பா4 ஷ்யம் ஸெய்லுவோ

ராமானுஜ கு3ரு த்4யான்கரி ஜிவ்லுவோ!’

என்று பாடினார்.


பூஜாமணி என்ற பத்திரிக்கையில் 1988ம் வருடம் நவம்பர் மாதம் நான் எழுதி வெளிவந்த கட்டுரை இது…

No comments: