Monday, April 22, 2013

மீனாட்சி கல்யாணம்


சோழர் குலக்கொடி காஞ்சினமாலை, வேதனை நீராய்த் திரண்டு விழிகளைக் குளமாக்கத் தன் கணவரை ஏறிட்டு நோக்கினாள். பெண்ணிற்குக் கடவுள்—கணவன்—எனவே, காஞ்சினமாலையின் விழிகள் துயரத்தில் மலையத்துவச பாண்டியனை நோக்கின. ஆனால் அவனுக்குக் கடவுள் ......... அந்த சிவபெருமான்தானே!
மனைவியையும் அவளது மடியில் தவழும் குழந்தையையும் மாறிமாறிப் பார்த்த மலையத்துவசனின் கண்களிலும் கண்ணீர்! ‘இறைவா!’’என்று நெஞ்சம் ஓலமிட,பூஜை அறையை நோக்கி கால்கள் விரைந்தன. அங்கே -----
சிவலிங்கத்தின் முன் வேரற்ற மரம்போல் சாய்ந்து வீழ்ந்தான் பாண்டிய மாமன்னன். நெஞ்சம் விம்மிட, உதடுகள் துடிக்க,’’இறைவா! குழந்தைப்பேறு இல்லையே என்று தவித்துபுத்திரகாமேஷ்டி யாகம் செய்தேன்! அரசாள வாரிசாக எனக்கொரு செல்வனை நீ தருவாய் என்று மனமாற நம்பி வேள்வி வளர்த்தேன்..ஆனால்....ஆனால்...அந்த வேள்வியில் தோன்றியதோ...ஒரு பெண் குழந்தை....அதுவும் மூன்று வயது நிரம்பி மூன்று தனங்களுடன் இந்தப் பெண் குழந்தையை ஏன் தந்தாய்? பகைவர் எள்ளி நகையாடவா? வாழ்நாள் முழுவதும் நான் வேதனைத் தீயில் வெந்து சாகவா?’’என்றெல்லாம் கண்ணீர் மல்கத் தன் மனத்துயரை மாதேவன் திருமுன் கூறிப்புலம்பினான் மலையத்துவசப்பாண்டியன்.
அப்போது -----
வானொலி ஒலித்த்து. அது – இது ;-
‘’மலையத்துவசா! மனம் கலங்காதே! மகளை-மகனாகப் பாவித்து வளர்த்து முடி சூட்டு. தக்க மணாளன் வரும் போது ஒரு தனம் மறையும். உன் குலம் வளரும்; வாழும்; செழிக்கும்; நிலைக்கும்!’’
அமுத வாக்கு மன்னனின் செவிவாசல் வழியே உள்ளத்தில் புகுந்து முகத்தில் மலர்ச்சியைத் தோற்றுவித்தது. திருவாக்குப்படி குழந்தைக்கு – ‘தடாதகை-என்னும் பெயர் சூட்டி பல்கலைப் பயிற்சிகளையும் அளித்து –
தக்கப் பருவத்தில் முடிசூட்டு விழாவையும் சிறப்புடன் நடத்தி – பாண்டிய நாட்டைக் கன்னிநாடு –என வழங்கிடும் சிறப்புடையதாக்கினான்.ஆனாலும்-
காஞ்சனமாலையின் துயரம் நீங்கியபாடில்லை. ‘பருவம் எய்தியும் மகளுக்கு மணம் கூடி வரவில்லையே!-என்ற அன்னையின் வேதனை தடாதகைப்பிராட்டியாரின் உள்ளத்தையும் தொட்டது.அன்னைக்கு ஆறுதல் கூறி,’’அகிலத்தை வென்று வருகிறேன்!’’-என்று சூழுரைத்து –அனுமதி பெற்று நால்வகைப் படைகளும் திரண்டெழ –திக்விஜயம் புறப்பட்டார் – தடாதகைப்பிராட்டியார்.
கயபதி,துரகபதி,நரபதி—முதலான வடபுல மன்னர்கள் தோற்று ஓடினர். ‘எதிர்க்கும் திறன் படைத்தோர் இல்லை-என்னும்படி வெற்றி முழக்கத்துடன் பாண்டியப்படை கயிலைமலை வந்தடைந்தது. ஆம், மலையரசனின் மகளும் – பராசக்தியுமான தடாதகைப்பிராட்டி மீண்டும் தன்னிடத்தே வந்தது கண்டு வரவு கூறுவது போல் அருவிகள் சிரித்தன.
‘’ வானார் கயிலை மலையான் மகள் தன்னை நீத்துப் போனாள் வந்தாள்
போர் முழக்கம் கயிலையையே ஆட்டிப்படைத்தது.
சிவபெருமானின் ஆணை நந்திதேவரை நோக்கி விரைந்தது.
சிவகணங்களுடன் தடாதகைப்பிராட்டியை எதிர்த்துப் போரிட சீறி எழுந்தார் திருநந்தித்தேவர்.கடுமையானப் போர்...கொடுமையானப் போர் .. என்று கூறும்படி கடும்போர் நிகழ்ந்தது.....சில கணங்கள்தான்—-
‘’ஆதிநாயகியின் அளப்பறிய ஆற்றலை அளப்பார் யாரே!’’
தோற்று ஓடுவதைத் தவிர வேறு வழி இல்லை- என்ற நிலையில் சிவபெருமானிடம் ஓடிவந்தார் திருநந்தித்தேவர். ‘பொன்னார் மேனியன் புன்னகைப் பூத்தார்.’’யாமே வருவோம்’’ –என்று திருவாய் மலர்ந்தார் புலித்தோல் ஆடைதரித்தவன்.
ஆதிசிவனுக்கும் ஆதிசக்திக்கும் போர்.....தொடங்.........
ஐயனைப் பார்க்கின்றாள்....அண்ணலும் நோக்குகின்றார்........
நோக்கிய விழிகள் நோக்கியவாறே நிலைக்கின்றன.
நெற்றிக்கண்ணனின் வெம்பார்வை பட்டகணமே தடாதகைப்பிராட்டியாரின் முத்தனங்களில் ஒன்று மறைந்த்து. தடாதகைப்பிராட்டியாரின் வீர உணர்வு நாண உணர்வாய் நெளிந்தோடி உடல் எங்கும் பரவசமாய்ப் பரவியது. அருகில் இருந்து இவற்றை கவனித்த அமைச்சர் சுமதியின் உள்ளத்தில் பழைய நினைவுகள் அலைமோதின. உடன் அவர் தடாதகைப்பிராட்டி யாரிடம் வான்ஒலிச் செய்தியைக் கூறி,’’அன்னையே! தங்கள் மணவாளர் இவரே!’’என்றார்.
அதை ஆமோதிப்பது போல் புன்முறுவல் தவழ சிவபெருமான் கூறினார்,’’ திக்விஜயத்தை நீ தொடங்கிய நாளில் இருந்தே நாமும் மதுரையை விட்டு உன்னைத் தொடர்ந்து வருகின்றோம். இனி நீ மதுரைக்குச் செல். யாம் விரைவில் வந்து உன்னை மணம் புரிவோம்!’’

**************** ************************** ******************
திருமணம்....தெய்வத்திருமணம்.....வர்ணிக்க வார்த்தைகள் ஏது? ஆயிரம் நா படைத்த ஆதிசேஷனாலேயே முடியாத அதை ஒரு நாக்கு கொண்ட என் எழுதுகோலால் முடியவா போகிறது?
மண்ணுலக மன்னர்களும் விண்ணுலக தேவர்களும் திரண்டிட --- பொற்கலசத்தில் உள்ள புனித நீரால் திருமால் – சிவபெருமானது சிவந்த திருவடிகளை விளக்குகிறார். ஆம்! ஒருகாலத்தில் திருமால் கண்டறிய முயன்று – வராக அவதாரமும் எடுத்து பாதாளத்தையும் குடைந்தும் – முயன்றும் காணாத் திருவடியைத் திருமால் தொட்டு விளக்கிடும் அருட் காட்சி – திருக்காட்சியாய் விரிந்த்து. இரு மலர்க் கரங்களையும் இணைத்தார். வேதமந்திர நாதம் ஒலித்தது. வேதநாயகனான நான்முகனே முன்னின்று நடத்தி வைக்க-சிவபெருமான்—தடாதகைப்பிராட்டியாரின் கழுத்தில் மங்கலநாண் பூட்டினார்.
உலகம் களித்தது; செழித்த்து; மணவிழா நிறைவுற்றது;
மங்கல ‘மணிநாதம் முழங்கிற்று!
**************** ******************** *********************
தடாதகைப்பிராட்டியார் நிறைந்த உள்ளத்துடன் அமர்ந்திருந்தார். குறை(ந்த)உள்ளத்துடன் சமையற்காரர்கள் பிராட்டிமுன் வந்து தொழுது நின்றனர். வந்தவர்கள் அம்மையிடம்,’’அம்மையே!விருந்தினர் யாவரும் உண்டு முடித்த பின்னும் எஞ்சி உள்ள உணவு இமயத்தையும் விஞ்சிடும் அளவு உள்ளதே!’’என்று குறை இரந்தனர். அதைக் கேட்ட பிராட்டி சுந்தர பாண்டியனான—சிவபெருமானை நோக்கினார்.
சிரித்தார் --- சிவபெருமான்!
குண்டோதரனின் வயிற்றில் வடவைத் தீயைப் புகுத்தினார்.
அடுத்த கணமே----
சுந்தரபாண்டியனின் குடையைத் தாங்கி வரும் குண்டோதரன் ----
‘’பசி ---பசி’’-என்று துடித்தான்.
‘’புசி –புசி’’-என்று உணவை மலையாய் கொட்டினர் சமையற்காரர்கள். அரை நொடியில் மலையாய்க் குவிந்த உணவுகளைத் தின்று தீர்த்த பின்னும் அவனது பசி அடங்கவில்லை.அனைவரும் திகைத்தனர். ஆனாலும் சோமசுந்தரக் கடவுள் அன்னபூரணியை அழைத்தார். அக்கணமே நான்கு திசைகளில் இருந்தும் நிலத்தைக் கிழித்துக் கொண்டு அன்னக் குழிகள் தோன்றின. அதில் இருந்து சுவையான தயிர் அன்னம் பொங்கி எழுந்து குண்டோதரனின் பசியைத் தீர்த்த்து. ஆனால் ----
இப்போது குண்டோதரனுக்கு தாகம்......தாகம்......தாகம்......அடங்காத் தாகம்......... கிணறு—குளம்—ஏறி—என்று எல்லா நீர் நிலைகளில் உள்ள நீரை எல்லாம் குடித்தும் குண்டோதரனின் தாகம் தீரவில்லை.
‘’தாகம்...தாகம்...தண்ணீர்.....தண்ணீர்....’’என்று மூச்சு முட்ட அரற்றியபடி சோமசுந்தரப்பெருமானின் திருவடிகளில் வீழ்ந்தான் குண்டோதரன்.இறைவன் திருவுளம் கொண்டார்.தம் முடியில் உள்ள கங்கையை மதுரையில் வைகையாகப் பாய விட்டார்—குண்டோதரனின் தாகத்தைத் தீர்க்க! ஆம்! நம் தாகத்தையும்தான்! ஆனால் நாமோ---
இறைவன் அருளிய புனித கங்கையாம் வைகையை நம் அறியாமையாலும் –சிலரின் சுயநலத்தாலும் சாக்கடையாக்கிக் கொண்டிருக்கிறோம். இறைவன் கொடுப்பான்—ஆனால் அதைக் காத்துப் பயன் படுத்திக்கொள்வது நம் பொறுப்பல்லவா?கடமை அல்லவா?
நாமும் நாடும் இதை உணரும் நாள் எப்போது வரும்?
***************** *********************** **************************
குறிப்பு;- தடாதகைப்பிராட்டியார் என்பது அருள் வாக்கின்படி அன்னைக்கு இடப்பட்ட இயற்பெயர். பின் நாளில் ‘மீன் போன்ற அழகிய கண்களை உடையதாலும்—மீன் தன் நேரடிப்பார்வையிலேயே குஞ்சு பொறித்துக் காத்திடும் இயல்பு போல்—அன்னையும் தம் மக்களைத் தம் கண் பார்வையிலேயே காத்திடும் சிறப்பு நோக்கியும் மீனாட்சி என்னும் சிறப்புப் பெயர் காரணப் பெயராயும் அமைந்த்து கண்டு எண்ணிஎண்ணி மகிழத்தக்கது.
********************** ******************** ***********************
என்னால் எழுதப்பட்ட இக்கட்டுரை ‘பூஜாமணி என்ற மாத இதழில் 1979 மே மாதம் பிரசுரமாகியுள்ளது.

No comments: